பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர்.  வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கல் ஜாகிர் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் அரைசதம் கடந்திருந்த நிலையில் மொமினுல் ஹக் 50 ரன்களிலும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாத்மான் இஸ்லாம் 93 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 316 ரன்களைச் சேர்த்து முன்னிலை நோக்கி நகர்ந்து வருகிறது. 

இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை முஷ்ஃபிக்கூர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் லிட்டன் தாஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 11ஆவது சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் வங்கதேச அணியானது நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை எடுத்தது.

பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹதி ஹசன் மிராஸும் அரைசதம் கடந்த நிலையில், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 191 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து இரட்டை சதத்தை அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஹசன் மஹ்முத் ரன்கள் ஏதுமின்றியும், ஷொரிஃபுல் இஸ்லாம் 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த மெஹிதி ஹசன் 77 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, குர்ராம் ஷஸாத் மற்றும் முகமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி மீண்டும் தடுமாறியது. 

Advertisement

இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சௌம் அயூப் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்ததுடன் 23 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அப்துல்லா ஷஃபிக் 12 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் 9 ரன்களுகுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News