டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கராச்சில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மொயீன் அலி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 31 ரன்களில் ஆட்டமிழக்க, முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹைதர் அலி 11 ரன்களிலும், ஷான் மசூத் 7 ரன்களோடு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் 68 ரன்கள் சேர்த்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இஃப்திகார் அஹ்மத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 28 ரன்கள் எடுத்திருந்த இஃப்திகார் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் லுக் வுட் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.