PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!

Updated: Tue, Oct 15 2024 19:13 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் ரன்களைச் சேர்த்து அணியை முன்னிலைப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் பாகிஸ்தான் அணி 19 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரர் காம்ரன் குலாம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். பின்னர் இருவரும் இணைந்த தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் தொடர்ந்து பாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் சகீலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த காம்ரன் குலாம் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். பின்னர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்ரன் குலாம் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 118 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இணைந்துள்ள முகமது ரிஸ்வான் - அகா சல்மான் இணை நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும், அகா சல்மான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் இரண்டு விக்கெட்டுகளையும், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை