பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. இதையடுத்து நடைபெற்ற முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெறிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பந்துவீச முடிவுசெய்து, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த இரு போட்டிகளிலும் சதம் விளாசிய ஃபகர் ஸமான் இப்போட்டியில் வெறும் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து இமாமுடன் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். ஆதன்பின் 54 ரன்களில் பாபர் ஆசாம் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இமாம் உல் ஹக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவ்ரைத்தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான் 32 ரன்களையும், ஆகா சல்மான் 31 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே 2 விக்கெட்டுகளையும், கொல் மெக்கன்ஸி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் -டாம் பிளெண்டல் இணை சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பிளெண்டல் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் அவரும் 65 ரன்களில் ஆட்டழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டெரில் மிட்செல் 21 ரன்களிலும், கேப்டன் டாம் லேதம் 45 ரன்களிலும், மார்க் சாப்மேன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய கொல் மெக்கன்ஸி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் அனித்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதுடன் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.