இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும் - பாட் கம்மின்ஸ்!

Updated: Thu, Sep 21 2023 20:02 IST
இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. அதில் 2023 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் முதலிரண்டு போட்டிகளில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் கேஎல் ராகுல் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் குறையை போக்குவதற்காக நீண்ட நாட்கள் கழித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே விராட், ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாமலேயே கில், இஷான் கிஷன், பும்ரா போன்ற வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றி பெறுவதற்கு போராட தயாராகியுள்ளது.

குறிப்பாக சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியாவை கடந்த மார்ச் மாதம் அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை பரிசாக கொடுத்தது. எனவே இம்முறை சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து அந்த பழைய கணக்கை இந்தியா தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலை கொடுப்பவராகவும் கருதப்படுகிறார். அதனால் சிராஜுக்கு எதிராக எதாவது ஸ்பெஷல் திட்டங்களை இத்தொடரில் வைத்துள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சிராஜ் நம்பர் ஒன் பவுலராக வந்தால் எங்களுக்கு என்ன அதைப் பற்றி கவலைப்படவில்லை என்ற வகையில் “இல்லை” என ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தங்களுடைய அணி வீரர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கலாம் என்பதையே பற்றி யோசிப்பதாக பேசி சவாலை ஆரம்பித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இல்லை. தற்போதைக்கு இந்திய கால சூழ்நிலைகளுக்குட்பட்டு உலகக் கோப்பைக்கு முன் சில வெற்றிகளை பதிவு செய்வதில் கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக முதல் போட்டிக்கு முன்பாக சில கலவைகளை உருவாக்கி சில மாறுபட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை போல் இந்தியாவில் வேறுபட்ட சூழ்நிலை நிலவும் என்பதால் அதற்கு எப்படி எங்களுடைய பவுலர்களை பயன்படுத்தலாம் என்பதில் நான் கவனம் செலுத்துகிறேன். அதனால் இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை