பிரித்வி ஷாவை தாக்கிய கும்பல்; காவல்துறை வழக்குப்பதிவு!

Updated: Thu, Feb 16 2023 18:40 IST
Prithvi Shaw Attacked For Denying Selfie (Image Source: Google)

இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்றவர் பிரித்வி ஷா அதன் பிறகு சீனியர் அணியில் இடம் பெற்று சதங்களை அடித்தாலும் அணியில் தனது இடத்தை பிரித்வி ஷா இழந்தார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி அரை இறுதிக்கு செல்லவில்லை. மேலும் டெஸ்ட் அணியிலும் பிரித்வி ஷா இல்லை. இதனால் ஐபிஎல் தொடர் வரை பிரித்வி ஷாவுக்கு ஓய்வு இருக்கிறது. இந்த ஓய்வை பயன்படுத்திக் கொண்டு மும்பையில் தனது நண்பர்களுடன் பிரித்வி ஷா தனது சொகுசு காரில் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருக்கிறார். 

அந்த ஹோட்டலுக்கு வந்த கும்பல் ஒன்று பிரித்வி ஷாவிடம் செல்ஃபி கேட்டிருக்கிறார்கள். அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த கும்பல் மீண்டும் ஒரு போட்டோ எடுக்க கேட்டிருக்கிறார்கள்.இதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தவுடன் அந்த கும்பல் பிரித்வி ஷாவுடன் வாய் தகராறில் ஈடுபட்டிருக்கிறது.

இதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகிகள் பிரித்வி ஷாவிடம் மோதலில் ஈடுபட்ட கும்பலை வெளியே அனுப்பி இருக்கிறது. பிரச்சனை முடிந்தது என பிரித்வி ஷா தனது நண்பர்களுடன் வெளியே வந்து தனது சொகுசு காரில் ஏறி சென்றுவிட்டார். அப்போது திடீரென்று மறைந்திருந்த கும்பல் பிரித்வி ஷாவின் காரை நிறுத்தி அவரிடம் மோதலில் ஈடுபட்டிருக்கிறது.

அப்போது பிரித்வி ஷாவிடம் எங்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் மேல் பொய் புகார் கொடுப்போம் என்றும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது. இதனை பிரித்வி ஷா பொருட்படுத்தவில்லை. இதை அடுத்து கடுப்பான அந்த கும்பல் பிரித்வி ஷாவின் சொகுசு காரில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இதனை அடுத்து பிரித்வி ஷாவின் நண்பர்கள் அவரை வேறு ஒரு காரில் அனுப்பி வைத்தார்கள்.

இது தொடர்பாக பிரித்வி ஷா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பிரித்வி ஷா போல் பல நட்சத்திரங்களும் பாலிவுட் நடிகர்களும் அதே ஹோட்டலில் இதே போன்று பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை