முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பரபரப்பான இரட்டை சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 129, ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது.
அதன் பின் விளையாடிய ஆஃப்கானிஸ்தானும் ரஹமனுல்லா குர்பாஸ் 50, இப்ராஹிம் ஸத்ரான் 50, குல்பதின் 55 எடுத்த உதவியுடன் 20 ஓவரில் சரியாக 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் மீண்டும் சரியாக 16 ரன்கள் எடுத்தது. அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா நிர்ணயித்த 12 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தான் 1 மட்டுமே எடுத்தது.
இதனால் 2ஆவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக இந்த போட்டியில் முதல் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தானுக்கு முகேஷ் குமார் வீசிய கடைசி பந்து முகமது நபியின் காலில் பட்டு சென்றது. அதை பயன்படுத்திய முகமது நபி 3 பைஸ் ரன்களை ஓடி எடுத்ததால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
குறிப்பாக பந்தை அடிக்காமல் எப்படி நீங்கள் ரன்கள் ஓட முடியும் என்று நபியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நபியும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் சண்டை போட்டதால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பேட்டில் பந்து படாமல் உடம்பில் பட்டு சென்றாலும் பைஸ் விதிமுறையை பயன்படுத்தி நபி எடுத்த 3 ரன்களுக்கு நடுவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் போது அது போன்ற தருணங்களில் கோபமடைந்து சண்டை போடுவதில் எந்த தவறுமில்லை என ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், “நாட்டுக்காக நீங்கள் விளையாடும் போது அதிகப்படியான ஆர்வமும் உணர்ச்சியும் இருக்கும். இது சம்பிரதாய போட்டியாக இருந்தாலும் கடைசி வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் அந்த நிகழ்வு நடந்தது போட்டியின் ஒரு அங்கமாகும். சில நேரங்களில் நீங்கள் கடுப்பாவதால் இப்படி நடப்பது பரவாயில்லை. சொல்லப்போனால் முதல் போட்டியில் இதே போன்ற சூழ்நிலையில் நாங்களும் ஓடி ரன்கள் எடுத்தோம். அது போன்ற ரன்களை நீங்கள் எடுக்க முடியாது என்று தடுக்க விதிமுறைகள் எதுவுமில்லை. எனவே இது விளையாட்டின் ஒரு அங்கமாகும்” என்று கூறியுள்ளார்.