இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி பங்கேற்றுள்ளது. அதன்படி 2 நாட்கள் கொண்ட முதல் போட்டி நேற்று தொடங்கியது. 

Advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி கேப்டன் ஜோஷ் பொஹானன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் ஜென்னிங்ஸ் – லீஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜென்னிங்ஸ் 25 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

Advertisement

இதனை தொடர்ந்து இளம் வீரர் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் லீஸ் 35 ரன்களில் போல்டாகி வெளியேற, தொடர்ந்து கேப்டன் பொஹானன் 8 ரன்களிலும், ஆலிவர் பிரைஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து லயன்ஸ் அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராபின்சன் – மவுஸ்லி கூட்டணி இணைந்தது.

6வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், ராபின்சன் 45 ரன்களிலும், தொடர்ந்து ஜேம்ஸ் கூல்ஸ் 5 ரன்களிலும், மவுஸ்லி 60 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். மொத்தமாக இங்கிலாந்து லயன்ஸ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய ஏ அணி தரப்பில் மானவ் சுதார் 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் – ரஜத் பட்டிதர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக விளையாடிய நிலையில், ஈஸ்வரன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சர்ஃபராஸ் கான் – ரஜத் பட்டிதர் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதர் சதம் விளாசி அசத்த, இன்னொரு பக்கம் சர்ஃபராஸ் கான் அரைசதம் கடந்தார். தொடர்ந்து ரஜத் பட்டிதர் 111 ரன்களில் ஆட்டமிழந்த சூழலில், சர்ஃபராஸ் கான் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் வந்த ஸ்ரீகர் பரத் 64 ரன்களிலும், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட துருவ் ஜுரெல் 50 ரன்களும் சேர்த்தனர்.

Advertisement

இறுதியாக இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 462 ரன்களை சேர்த்த போது, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் கடைசி வரை களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்கள் கொண்ட போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News