ரஞ்சி கோப்பை 2024-25: விதர்பா 353 ரன்களில் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அதர்வா டைடே ரன்கள் ஏதுமின்றியும், ஆதித்யா தாக்ரே 5 ரன்களுக்கும், துருவ் ஷோரேவும் 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் விதர்பா அணி 44 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் மற்றும் கருண் நாயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனிஷ் மாலேவார் 75 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யாஷ் ரத்தோட் 13 ரன்களுக்கும், கேப்டன் அக்ஷய் வாத்கரும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கருண் நாயர் 100 ரன்களுடனும், ஹர்ஷ் தூபே 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் கருன் நாயர் 18 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 122 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த ஹர்ஷ் தூபேவும் 69 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், விஜய் சங்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது அலி 4 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்னிலும், பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசனும் 22 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 5ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 22 ரன்களில் விஜய் சங்கர் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஆண்ட்ரே சித்தார்த் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள பிரதோஷ் ரஞ்சன் பால் - சாய் கிஷோர் இணை நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.இதன்மூலம் தமிழ்நாடு அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்களுடனும், சாய் கிஷோர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விதர்பா தரப்பில் ஆதித்யா தாக்ரே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 194 ரன்கள் பின் தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.