ரஞ்சி கோப்பை 2025: யாஷ் ரத்தோட் அரைசதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 122 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய டேனிஷ் மாலேவார் 75 ரன்களையும், ஹர்ஷ் தூபே 69 ரன்களையும் சேர்த்து அணியை சரிலிருந்து மீட்டனர். இதன்மூலம், விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், விஜய் சங்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது அலி 4 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்னிலும், பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசனும் 22 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 5ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 22 ரன்களில் விஜய் சங்கர் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஆண்ட்ரே சித்தார்த் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் தமிழ்நாடு அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் 194 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தமிழ்நாடு அணி தரப்பில் பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்களுடனும், சாய் கிஷோர் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சாய் கிஷோர் 7 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதோஷ் ரஞ்சன் பாலும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சோனு யாதவ் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷ் தாக்ரே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 128 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய விதர்பா அணியில் தொடக்க வீரர்கள் அதர்வா டைடே 19 ரன்களுக்கும், துருவ் ஷோரே 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய டேனிஷ் மலேவார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கருண் நாயரும் 29 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் ஆகாஷ் வத்கரும் 8 ரன்களுடன் நடைடைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த யாஷ் ரத்தோட் - ஹர்ஷ் தூபே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் யாஷ் ரத்தோட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் விதர்பா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யாஷ் ரத்தோட் 55 ரன்களுடனும், ஹர்ஷ் தூபே 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.