இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இதனிடையே, அவர் உடல்நலம் தேறி வருவதற்கு 6 மாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை முழுமையாக தவற விடுகிறார் ரிஷப்.
இதே போல் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய தகுதியாகிவிட்டார் என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டில் இருந்தே காயம் ஆறும் வரையில் ஓய்வெடுப்பார் எனவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, “முன்னோக்கி ஒரு அடி, வலிமையாக ஒரு அடி, சிறந்த ஒரு அடி” என்று பதிவிட்டு இருந்தார். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது இந்த சமூக வலைத்தள பதிவுக்கு இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் சில எமோஜிகளை குறியிட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமை தாங்கும் டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ” உங்களைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று கமெண்ட் செய்திருக்கிறார்.
வேகமாக தேறிவரும் ரிஷப் பந்த் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்றாலும் அதற்கு அடுத்து வரக்கூடிய ஒருநாள் உலகக் கோப்பைக்கு குணமடைந்து முழு உடல் தகுதியை எட்ட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் பிரார்த்தனையுமாக இருக்கிறது.