நான் தேர்வு செய்யும் அணியில் எப்போதும் ரிஷப் பந்த் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!

Updated: Tue, Apr 16 2024 19:59 IST
நான் தேர்வு செய்யும் அணியில் எப்போதும் ரிஷப் பந்த் இருப்பார் - ரிக்கி பாண்டிங்! (Image Source: Google)

வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதில் அவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்றவற்றை தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்யவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளனர். 

இந்நிலையில் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷாப் இருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் அவர் இருக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். இந்த தொடர் முடிவதற்குள் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க தகுதியானவர் என்பதை நிரூபிப்பார்.

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக ஐபிஎல்லில் ரிஷப் பந்த் விளையாடியதைப் பார்த்தோம், இப்போது மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டை சுற்றிலும் ஆழம் அதிகம் என்பது நாம் நிச்சயமாக அறிந்த ஒன்று. கீப்பர்-பேட்டர்களுடன், சில தோழர்கள் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன். அவர்களில் இஷான் கிஷன் நன்றாக விளையாடுகிறார், சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடுகிறார், கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுகிறார்.

இதனால் இந்திய கிரிக்கெட்டில் உங்களுக்கு நிறைய வீரர்கள் கைவசம் உள்ளனர். ஆனால் நான் ஒரு அணியை தேர்வு செய்தால், வாரத்தின் ஒவ்வொரு நாளும் அதில் ரிஷப் பந்த் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் இரண்டு அரைசதங்களுடன் 194 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை