அந்த நாள் என்னைச் சுற்றி நிறைய மகிழ்ச்சி இருந்தது - கபா வெற்றி குறித்து ரிஷப் பந்த்!

Updated: Fri, Jan 19 2024 22:26 IST
அந்த நாள் என்னைச் சுற்றி நிறைய மகிழ்ச்சி இருந்தது - கபா வெற்றி குறித்து ரிஷப் பந்த்! (Image Source: Google)

இந்திய அணி ஆஸ்திரேலியக்கு எதிராக அவர்கள் நாட்டில் கபா மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பி விட, அஜிங்கியா ரஹானே தலைமையில் இளம் இந்திய வீரர்கள், மிகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் தொடரை வென்று வந்தார்கள்.

அந்த குறிப்பிட்ட டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய எல்லா வீரர்களுமே தொடரின் கடைசியில் ஹீரோக்களாக வெளியே வந்தார்கள். அதில் மிக முக்கியமானவர் காபா டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்த ரிஷப் பந்த்.

இந்நிலையில், வெற்றி பெற்ற அந்த நேரத்தில் அணி வீரர்கள் எப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்? தான் எப்படி இருந்தேன்? ரோஹித் சர்மா அதை பார்த்து தன்னிடம் என்ன சொன்னார்? என்பது குறித்து எல்லாம் பின்னோக்கி போய் நிறைய விஷயங்களை ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அந்த நாள் அந்த நேரம் ரோஹித் சர்மா என்னிடம் கூறியது நினைவில் இருக்கிறது. வெற்றி பெற்றதில் எல்லோரும் மிக மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ஆனால் நான் அப்படி இல்லை என்பதை ரோஹித் சர்மா பார்த்தார். அப்பொழுது ரோஹித் சர்மா என்னிடம் வந்து ‘ நீ எப்படியான ஒரு விஷயத்தை செய்து இருக்கிறாய் என்று உனக்கு புரிகிறதா?’ என்று கேட்டார். 

நான் அவரிடம் ஒரு மேட்சை வென்று இருக்கிறேன், இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறோம் என்று கூறினேன் எனக்கு அந்த நேரத்தில் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. நான் இரண்டுக்கும் மத்தியில் சிக்கிக் கொண்டிருந்தேன். நான் அந்த நேரத்தில் அதீத உற்சாகமடையக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினேன். என்னைச் சுற்றி நிறைய மகிழ்ச்சி இருந்தது. 

 

நான் அப்பொழுது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் எனக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அப்பொழுது எனக்கு முதல் டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் அணியிலும் என்னுடைய இடம் உறுதியாகவில்லை. நான் மீண்டும் விளையாட வேண்டும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று இருந்தேன். எனவே அந்த சூழ்நிலை எனக்கு கனவு நனவானது போல இருந்தது. பலரும் என்னை நம்பாத நேரத்தில் நான் என்னை நம்பினேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை