அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டத்தை மாற்றிய ரியான் பராக் - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதன்படி இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை வநிந்து ஹசரங்கா வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட ஷிவம் தூபே முதல் பந்தில் பவுண்டரியையும் இரண்டாவது பந்தில் சிக்ஸரையும் பறக்கவிட்டு சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இதனால் செய்வதறியாமல் நின்றை வநிந்து ஹசரங்கா மூன்றாவது பந்தை அவுட் சைட் ஆஃபில் ஃபுல்லராக வீச அதனை எதிர்கொண்ட தூபே கவர்ஸ் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் அத்திசையில் இருந்த ரியான் பராக் யாரும் எதிர்பாரா வகையில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்ததுடன் தூபேவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில் ரியான் பராக்கின் இந்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணியில் நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களிலும், கேப்டன் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.