தொடக்க வீரராக புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!

Updated: Fri, Aug 02 2024 20:22 IST
Image Source: Google

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு,  பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 56 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துனித் வெல்லாலகே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடினாலும், மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, ஜனித் லியானகே, அகிலா தனஞ்செய ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த துனித் வெல்லாலகே அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்பத்திய கேப்டன் ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் தடுமாறி வந்த ஷுப்மன் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தைப் பதிவுசெய்த ரோஹித் சர்மாவும் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு அதிவேகமாக 15ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா இன்றைய போட்டியின் மூலம் பெற்றுள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 331 இன்னிங்ஸ்களில் 15ஆயிரம் ரன்களை கடந்துடன், அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் எனும் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 352 இன்னிங்ஸ்களில் 15ஆயிரம் ரன்களை எட்டி இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் 361 இன்னிங்ஸில் 15ஆயிரம் ரன்களை எட்டி மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை