என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் - சுரேஷ் ரெய்னா!

Updated: Mon, Oct 16 2023 20:23 IST
என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் - சுரேஷ் ரெய்னா! (Image Source: Google)

ஐசிசியின் ஒருநள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.  அந்த வகையில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நல்ல ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

அவர்களுக்கு அடுத்து நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி யார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். 

இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, “நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணி வீரர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அப்படி பேசும் போது தற்போதுள்ள இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே தோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோஹித்துக்கும் மரியாதை கொடுப்பதாக புரிந்து கொண்டேன். ஏனெனில் ரோஹித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம்.

அதோடு சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஓய்வறையில் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவரது லீடர்ஷிப் தகுதிகளை நான் தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான். ஏனெனில் ரோஹித் அமைதியானவர், அதோடு யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கக் கூடியவர்.

அதுமட்டுமின்றி வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை முன்நின்று வழி நடத்தக்கூடிய கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த தோனி என்பதை நினைக்க வைக்கிறது. நிச்சயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை