இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அரைசதம் கடந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு அதிவேகமாக 15ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் அவர் மேற்கொண்டு 7 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார்.
அந்தவகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த 6ஆவது வீரராக ரோஹித் சர்மா இருந்து வருகிறார். நாளைய போட்டியில் அவர் மேற்கொண்டு 7 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தபடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களைச் சேர்த்துள்ளார்.
அதேசமயம் ரோஹித் சர்மா 263 ஒருநாள் போட்டிகளி விளையாடி 10,767 ரன்களைச் சேர்த்துள்ளார். இந்த பட்டியலின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில், 18,426 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் விராட் கோலி, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.