உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!

Updated: Tue, Sep 05 2023 14:28 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து ஏற்கனவே களமிறங்கியுள்ள நிலையில் விக்கெட் கீப்பராக விளையாடும் கேஎல் ராகுலும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை விளையாடுவதற்காக இலங்கை சென்றடைந்தார். இந்நிலையில் 2023 உலகக்கோப்பை அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

இந்த அணியில், ரோஹித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியின் பேட்டர்களாக ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிசான் ஆகியோருடன் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்காத சூர்யகுமார் யாதவ் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளனர்.

மேலும் பேட்டிங் ஆழத்தை கருத்தில் கொண்டு ஷார்துல் தாகூருடன் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர். அத்துடன் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி நேரத்தில் வாய்ப்பு பெறுவார்களா என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், சஹால் மற்றும் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ள சஞ்சு சாம்சன் அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் (கீப்பர்), கேஎல் ராகுல் (கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷார்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை