தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பார்ல் ராயல்ஸை பந்துவீச அழைத்தது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரஸ்ஸி வேன்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வேன்டர் டுசெனுடன் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் காலின் இங்ரம் 7 ரன்களிலும், ஜார்ஜ் லிண்டே ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழ்ந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹென்றிக்ஸும் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரீவிஸ் - டெலானோ போட்ஜீட்டர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் டெவால்ட் பிரீவிஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெலானோ போட்ஜீட்டர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தயான் கலீம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News