தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ் - குசால் மெண்டீஸ் இணை தொடக்கம் தந்தனர். இதில் இருவரும் ஆரம்பத்திலேயே கொடுத்த அடுத்தடுத்த கேட்ச்சுகளை கேப்டவுன் வீரர்கள் தவறவிட்டனர். 

Advertisement

அதன்பின் அதிரடி காட்டத் தொடங்கிய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினர். அதிலும் காகிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அசுர வேகப்பந்துவீச்சாளர்களின் ஓவர்களை அடித்து நொறுக்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்களைக் குவித்தது. அதன்பின் பந்துவீச வந்த எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் தனது முதல் ஓவரிலேயே 29 ரன்களைச் சேர்த்திருந்த குசால் மெண்டீஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பின்னர் 27 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகள் என 62 ரன்காளைச் சேர்த்திருந்த வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த ரைலீ ரூஸோவும், ஃபோர்டுயினின் விக்கெட்டுகளையும் ரஷித் கான் கைப்பற்றி, டி20 கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டையும் வீழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து முத்துசாமி 3, தியூனிஸ் டி ப்ரூயின் 36, வெய்ன் பார்னெல் 1 ஆகியோரது விக்கெட்டுகளை ஜோஃப்ரா ஆர்ச்சர் கைப்பற்றி அணியின் ஸ்கோர் வேகத்தைக் குறைத்தார். இறுதியில் ஜேம்ஸ் நீஷம் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளுன் 22 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ கேப்டவுன் தரப்பில் ரஷித் கான், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளையும், ஓடியன் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News