இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை அவது தனது சமூக வலைதளத்தில் காணொளி பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் அதன்பின் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஷிகர் தவான் இதுநாள் வரை 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இதில் 24 சதங்களும், 55 அரைசதங்களும் அடங்கும். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதம், 51 அரைசதங்கள் என 6,769 ரன்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது வாழ்த்து செய்தியினை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “எங்களின் அட்டகாசமான ஷிகர் தவானை கிரிக்கெட் மைதானம் நிச்சயம் இழக்கும்.
உங்கள் புன்னகை, உங்கள் நடை மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகவே உள்ளது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கத்தை நீங்கள் திருப்பும்போது, உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அடுத்ததாக வரும் எல்லாவற்றிலும் சிறந்ததைத் தவிர வேறொன்றுமில்லை. அதனால் எப்போதும் சிரித்துக் கொண்டே இரு, ஷிகர் தவான்” என்று பதிவுசெய்துள்ளார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் இந்த எக்ஸ் தள பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்திய அணியின் தற்போதுள்ள பயிற்சியாளர் கௌதம் கம்பீர், முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக், வாசிம் ஜாஃபர் மற்றும் பிசிசிஐ, ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்திய பஞ்சாப் கிங்ஸ் என பல்வேறு தரப்பில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு முடிவு குறித்து வாழ்த்து செய்திகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.