IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; சூர்யாவுக்கு கேப்டன் பொறுப்பு!

Updated: Mon, Nov 20 2023 22:40 IST
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; சூர்யாவுக்கு கேப்டன் பொறுப்பு! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.  இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இன்ற் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக இந்த தொடரை நவம்பர் 23 முதல் சொந்த மண்ணில் பிசிசிஐ நடத்துகிறது. இருப்பினும் உலகக்கோப்பை தோல்வியை சந்தித்ததால் கலங்கிய கண்களில் ஈரம் காய்வதற்குள் வெளியான இந்த அறிவிப்பு பல ரசிகர்களை கடுப்பாக வைப்பதாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகக்கோப்பை தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிற்கு அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் துணை கேப்டனாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்ற ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது தலைமையில் இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வாகியுள்ளார்கள். அதே போல காயத்தால் உலகக்கோப்பையில் விளையாடாத அக்ஸர் படேலுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் தேர்வாகியுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா, ஆல் ரவுண்டராக ஷிவம் துபே ஆகியோரும் பந்துவீச்சாளர்களாக முகேஷ் குமார், அர்ஷிதீப் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஆனால் இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு வரை இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்த சஞ்சு சாம்சன் அதன்பின் இந்திய அணியில் தேர்வுசெய்யப்படாமல் தொடர்ந்து புறக்கணிப்படுவது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக கடைசி 2 போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கைக்வாட், திலக் வர்மா, இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை