அடுத்தடுத்து கேப்டன் மாற்றம் குறித்து மௌனம் கலைத்த கங்குலி!

Updated: Sat, Jul 09 2022 21:55 IST
Seven captains in seven series isn't ideal but there isn't much we can do about it: Sourav Ganguly (Image Source: Google)

இந்திய அணி தற்போது இங்கிலாந்துடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த தொடர் வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இந்திய அணியை வழிநடத்தப்போகும் 8ஆவது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். இப்படி மாதத்திற்கு ஒரு கேப்டன் என மாற்றினால் இந்திய அணியின் எதிர்காலம் என்ன ஆகும், வீரர்களின் புரிதல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிசிசிஐ இதற்கு நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் எனக்கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, "இவ்வளவு குறுகிய நாட்களில் 7 கேப்டன்களை மாற்றியது சிறந்த முடிவல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் இது நடந்துவிட்டது. இதுதான் உண்மையான காரணம்.

தென் ஆப்பிரிக்கவுடனான தொடரில் ரோஹித் சர்மா கேப்டன்சி செய்ய தயாராக இருந்த போது காயமடைந்தார். இதனால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுடனான தொடரில் கே.எல்.ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு கரோனா வந்ததற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. இப்படி கேப்டன்கள் மாற்றபட்ட போது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் நிலைமை தான் கவலையளிக்கிறது. புது புது கேப்டன்களுடன் அவர் பணியாற்றி வருவது மிகவும் இக்கட்டான சூழலாகும்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை