அஸ்வின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!

Updated: Sat, Jun 24 2023 14:42 IST
Shastri attacks Ashwin for ‘teammates are colleagues’ remark (Image Source: Google)

இந்திய அணி நிர்வாகத்தின் தவறான அணித் தேர்வின் காரணமாக இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து பட்டத்தை இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருந்தும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் அணியில் சேர்க்கப்படாதது பெரிய சர்ச்சை ஆனது.

இத்தோல்விக்கு பின் தற்போது டிஎன்பில் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வழிநடத்தி வரும் அஸ்வின், தனிப்பட்ட முறையில் சில கருத்துக்களை மறைமுகமான முறையில் நாகரீகமாக வெளியில் தெரிவித்து தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்து இருந்தார்.

அவருடைய கருத்தில் ஒன்றாக அணி சூழல் பற்றி அவர் கூறும் பொழுது “முன்பு அணியில் விளையாடக்கூடிய எல்லோரும் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லோரும் ஊழியராக இருக்கிறார்கள். இதனால் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவது கற்றுக் கொள்வது எல்லாமே குறைகிறது” என்கின்ற ரீதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருந்தார்.

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியிடம் கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது, அதற்கு அவர் கொஞ்சம் தனது பாணியில் கடுமையாகவே பதில் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு எப்பவுமே அதிகம் நண்பர்கள் உள்ளனர். அதாவது வேலை சம்பந்தமான நண்பர்கள் அதிகம். இங்கு யாருக்காவது எத்தனை நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டால் நான்கு அல்லது ஐந்து நண்பர்கள்தான் இருப்பார்கள். நான் எனக்கான ஐந்து நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அதற்கு மேல் நண்பர்கள் தேவைப்படவில்லை.

நான் சொல்வது என்னவென்றால் எப்பொழுதும் வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் இருப்பார்கள். பெரிதாக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். என்னுடைய கமெண்ட்ரி பாக்ஸில் எனக்கு சகாக்கள்தான் இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை