இந்தியாவின் துருப்பு சீட்டாக இவர்தான் இருக்கப் போகிறார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Sat, Feb 04 2023 16:38 IST
Shreyas Iyer has been the backbone of India's batting order: R. Ashwin (Image Source: Google)

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கான டெஸ்ட் தொடர் வருகின்ற ஒன்பதாம் தேதி முதல் நாக்பூரில் நடைபெற இருக்கிறது . சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு இந்தத் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம் .

ஆனாலும் கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து இருக்கிறது . இதனால் கட்டாயம் இந்த தொடரை வென்றே ஆக வேண்டிய முனைப்பில் இருக்கிறது ஆஸ்திரேலியா . மேலும் அந்த அணி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் சென்று டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்தியாவிற்கு வந்திருக்கிறது .

இரண்டு அணிகளுமே தொடரின் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்தத் தொடர் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் தங்களது கணிப்புகளை கூறி வருகின்றனர் . டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . மேலும் இந்திய அணிக்காக ரிஷப் பந்த் ஆடாத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரராக இருப்பார் என்று அவர் கூறியிருக்கிறார் .

இது பற்றி பேசிய அஸ்வின், “எல்லோரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் என்னை பொருத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்தத் தொடரில் இந்தியாவின் துருப்பு சீட்டாக இருக்கப் போகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் அவர் சிறப்பான ஆட்டத்தை நடு வரிசையில் வெளிப்படுத்தி இருக்கிறார் . ரிஷப் பந்த் இல்லாத இந்த நேரத்தில் இவருடைய ஆட்டம் தான் இந்திய அணிக்கு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இரண்டாவது போட்டிக்கான அணியில் நிச்சயமாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை