இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பின் நடைபெற்ற தொடர்களில் சோபிக்க தவறியதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் பிசிசிஐ-யின் அரைவுரையை கேட்காமல் தனக்கும் காயம் இருப்பதாக கூறி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஈடுபட்டார்.
இதன் காரணமாக பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளிலிருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதுடன், தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்தார்.
இதன் காரணமாக தற்சமயம் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதல் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. முன்னதாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஜிம்பாப்வே தொடருக்கான தேர்வில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
அதன்படி, அபிஷேக் சர்மா, ரியான் பராக், மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, யாஷ் தயாள் உள்ளிட்ட வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் உள்ள அனைவரும் ஜிம்பாப்வே டி20 போட்டியில் இடம் பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக தனது பணியை மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.