புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Tue, Aug 13 2024 20:01 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் தங்களை தயார்செய்யும் வகையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் படி பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க இருக்கும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்கள் சொந்த மாநில அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

அந்தவரிசையில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷான் விளையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரைத்தொடர்ந்து, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை மும்பை கிரிக்கெட் சங்கம் உறுதிசெய்திருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் மும்பை அணிக்காக புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க செயலாளர் தீபக் படேல் கூறுகையில், “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். அவர் ஆகஸ்ட் 27 முதல் கோவையில் நடைபெறும் மும்பை மற்றும் ஜம்மு & காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடுகிறார்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

முன்னதாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அதன்பின் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயரை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ கேட்டுகொண்ட பிறகும், தனக்கு காயம் இருப்பதாக கூறிவிட்டு, ஐபிஎல் தொடருக்காக பயிற்சிகளை மேற்கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ, ஸ்ரேயாஸ் ஐயரின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை