ரவி சாஸ்திரி, ஷுப்மன் கில் ஆகியோருக்கு பிசிசிஐ விருது!

Updated: Mon, Jan 22 2024 22:20 IST
ரவி சாஸ்திரி, ஷுப்மன் கில் ஆகியோருக்கு பிசிசிஐ விருது! (Image Source: Google)

இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமாக இருந்தவர் ரவி சாஸ்திரி. கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பின் அவர் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 280 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

தனது ஓய்வு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரி, கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராகவும், 2017ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சியாளராக செயல்பட்ட காலத்தில் இந்திய அணி 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடனும் வெளியேறியது. 

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது ரவி சாஸ்திரிருக்கு வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான ஷுப்மன் கில், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை குவித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 5 சதங்களையும் விளாசி அசத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை