பாகிஸ்தான் போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!

Updated: Tue, Oct 10 2023 11:51 IST
Image Source: Google

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நேற்று முந்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த உலகக் கோப்பை தொடரினை அற்புதமாக துவங்கியுள்ளது. அடுத்ததாக நாளை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி மைதானத்தில் விளையாடயிருக்கிறது.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்ட ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் டெங்கு காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. அவர் முழுஉடற்தகுதி பெறாததால் முதல் போட்டியை தவறவிடுவதாக ரோஹித் சர்மா அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் டெல்லி சென்ற இந்திய அணியுடன் ஷுப்மன் கில் பயணிக்கவில்லை என்றும் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் போட்டியை தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் டெங்கு காய்ச்சினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் காய்ச்சலின் தீவிரத்தில் இருந்து முழுவதுமாக வெளிவந்து விளையாடும் அளவிற்கு முழுஉடற்தகுதியை எட்டுவது கடினமான காரியம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்றும் அதன் பிறகு அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வேண்டுமானால் இந்திய அணிக்கு அவர் திரும்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை