SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

Updated: Sun, Feb 11 2024 22:16 IST
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயண் மேற்கொப்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த பதும் நிஷங்கா இப்போட்டியில் வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் இணைந்த கேப்டன் குசால் மெண்டிஸ் - சதீரா சமரவிக்ரமா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 52 ரன்களுக்கு சமரவிக்ரமாவும், 61 ரன்களுக்கு குசால் மெண்டீஸும் என விக்கெட்டை இழந்தனர்.  அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - ஜனித் லியானகே இணையும் பொறுப்பாக விளையாடியதுடன், இருவரும் அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.

ஆனால் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்திருந்த லியானகே 50 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 97 ரன்களை மட்டுமே சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மத் ஷா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயத்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் 54 ரன்களில் இப்ராஹிம் ஸ்த்ரான் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்களில் ரஹ்மத் ஷாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதி, அஸ்ரதுல்லா ஸஸாய், முகமது நபி, இக்ரம் அலிகில், குல்பதின் நைப் என அனைத்து பேட்டர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சரித் அசலங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை