SL vs AUS, 2nd ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Updated: Fri, Feb 14 2025 16:57 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இருவரும் இணைந்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்துடன், சிறப்பாக விளையாடி தங்களுடைய அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களை எடுத்திருந்த நிஷான் மதுஷ்கா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து குசால் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டான் சரித் அசலங்கா இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். 

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்திருந்த குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சரித் அசலங்கா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின் அவருடன் இணைந்த ஜனித் லியானகேவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சரித் அசலங்கா 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 78 ரன்களையும், ஜனித் லியானகே 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.

அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 8 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 45 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜோஷ் இங்கிலிஸ் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆரோன் ஹார்டியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னிற்கும், ஸ்டீவ் ஸ்மித் 29 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ, வநிந்து ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை