SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

Updated: Mon, Sep 23 2024 10:35 IST
Image Source: Google

இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்டது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் தனது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் குசால் மெண்டிஸ் தனது அரைசதததைப் பதிவுசெய்தார்.  இதன்மூலம், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்களையும், குசால் மெண்டீஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 70 ரன்களையும், கேன் வில்லியம்சன் 55 ரன்களையும், டேரில் மிட்செல் 57 ரன்களையும், கிளென் 49 ரன்களையும் எடுத்ததன் காரணமாக 340 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகலையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 35 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தனஞ்செயா டி சில்வா, தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதன்மூலம் இலங்கை அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்களைச் செர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக திமுத் கருணரத்னே 83 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 61 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன்கலையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இணைந்த லேதம் - வில்லியம்சன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் வில்லியம்சன் 30 ரன்களிலும், லேதம் 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிரங்கிய ரச்சின் ரவீந்திரா ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் விளையாடிய, டேரில் மிட்செல் 8 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 30 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 4 ரன்களுக்கும், மிட்செல் சான்ட்னர் 2 ரன்னுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

ஆனால் மறுமுனையில் அபாரமாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திர அரைசதம் கடந்ததுடன், சத்தை நோக்கி விளையாடி வருகிறார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தை ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். அந்தவகையில் அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரச்சின் ரவீந்திரா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 92 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத்தொடர்து களமிறங்கிய வில்லியம் ஓரூர்க்கும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 211 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை