இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 30 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஐடன் மார்க்ரம், தப்ரைஸ் ஷம்ஸி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டி காக்குடன் இணைந்து விளையாடிய ஐடன் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் அதிரடியாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 14.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.