இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்தை பந்துவீச அழைத்தார்.  

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த அணியின் மூத்த வீரர்கள் தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். 

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினேஷ் சண்டிமால் 30 ரன்களிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களுடனும் என நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய குசால் மெண்டிஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 50 ரன்களை எடுத்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரமேஷ் மெண்டிஸ் 14 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News