சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சௌராஷ்டிரா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சௌராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் தரங் கோயல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஹர்விக் தேசாய் மற்றும் பிரெரக் மான்கட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்விக் தேசாய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மான்கட் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து 55 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்விக் தேசாயும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ருச்சித் அஹிர் - சமார் கஜ்ஜர் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசித்தள்ளினர். இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 56 ரன்னில் ருச்சித் அஹிர் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த விஷ்வராஜ் ஜடேஜாவும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சமார் கஜ்ஜர் 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் சௌராஷ்டிரா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 235 ரன்களைக் குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டுகளியும், சாஇ கிஷோர் மற்றும் கேப்டன் ஷாருக் கான் அகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இந்திரஜித் 11 ரன்னிலும், ரஹேஜா 17 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பாலும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் - பூபதி குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதில் ஜெகதீசன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாருக் கான் ரன்கள் ஏதுமின்றியும், முகமது அலி 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த பூபதி குமாரும் 68 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சௌராஷ்டிரா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News