இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது - சவுரவ் கங்குலி!

Updated: Tue, Jul 18 2023 21:53 IST
இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது - சவுரவ் கங்குலி! (Image Source: Google)

இளம் வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 171 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அறிமுக போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், ப்ரிதிவி ஷா ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் 3ஆவது வீரர் ஆகிறார். 

தற்போது 21 வயதே ஆகும் இவர், இன்னும் பல சதங்கள் படைத்து சாதனைகளைப் படைப்பார் என்கிற எதிர்பார்ப்பு பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இவருக்கு பல்வேறு வீரர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி தன்னுடைய ஆதரவை தெரிவித்து ஜெய்ஸ்வால் 50 ஓவர் உலககோப்பையில் ஆடினால் கூடுதல் சிறப்பு என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “அறிமுக போட்டியில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதை இளம் வயதில் ஜெய்ஸ்வால் செய்திருக்கிறார். அவருடைய மனவலிமை மற்றும் டெக்னிக் மிகச்சிறப்பாக இருக்கிறது. மேலும் அறிமுக போட்டியில் சதம் அடிப்பது எவ்வளவு சிறப்பு என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் நானும் அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளேன்.

டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும். நான் எப்போதும் இடது-வலது பேட்ஸ்மேன் கூட்டணிக்கு ஆதரவு தருவேன். மேலும் துவக்க வீரராக இருப்பதால் எதிரணி வீரர்களுக்கு இது கூடுதல் சிக்கலையும் தரும். ஜெய்ஸ்வால் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இளம் வயதில் இந்திய அணிக்கு வருவது எதிர்காலத்திற்கு சிறப்பானதாகப்படுகிறது. மேலும் இந்திய கிரிக்கெட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதையும் இது உணர்த்துகிறது” என கங்குலி தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை