ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது - சௌரவ் கங்குலி திட்டவட்டம்!

Updated: Mon, May 10 2021 20:09 IST
Sourav Ganguly Says Remaining IPL 2021 Matches "Can't Happen In India" Due To "Organizational Hazar (Image Source: Google)

ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்றது. இத்தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டாம் அலை என மருத்துவர்கள் அனைவரும் விளக்கம் அளித்தனர். இது முதல் அலையை விட மிக மோசமாக இருக்கும் என்று அனைவரும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியவாறு தற்பொழுது இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் போகிறது.

சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் 4 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. சிகிச்சை பெற்று வரும் மக்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் நடத்துவது சரிதானா என்று அனைவரும் கேள்வி கேட்ட நிலையில், அச்சத்திலும் பயத்திலும் மூழ்கி இருக்கும் மக்களுக்கு இது நம்பிக்கையும் பொழுதுபோக்கும் தேவை. அதற்காகவே இதை நாங்கள் பாதுகாப்பாக நடத்துகிறோம் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போதைக்கு தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீதி போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும் என்று பிசிசிஐ கூறியிருந்தது. பிசிசிஐ கூறியதை அடுத்து இந்தியாவில் மறுபடியும் நடைபெறுமா என்று அனைவரும் கேள்வி எழுப்பினார். அவர்களது கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நிச்சயமாக இந்தியாவில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கங்குலி, “இந்தியாவில் நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை. இரண்டாவது அலை முடிந்து, மூன்றாவது அலை வரும் என்றும் மருத்துவ குழுவினர் கூறி வருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் கண்டிப்பாக இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை. 

அதேசமயம் வருகிற ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள், 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதுபோக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது.

எனவே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் வைத்து ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்று கேட்டால் நடைபெறாது என்று தான் நான் கூறுவேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை