இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Fri, Jan 05 2024 11:48 IST
இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றது. ஏற்கனவே இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. குறிப்பாக ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இரண்டாம் நாள் ஆட்டமான இன்றுடன் முடிவுக்கு வந்தது. 

இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இன்னிங்சில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். மேலும் அவர் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் இந்த டெஸ்டில் தொடரில் மட்டும் மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தொடர் நாயகன் விருது குறித்து பேசிய ஜஸ்பிரீத் பும்ரா, “இந்த மைதானம் எப்பொழுதுமே என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு மைதானம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்கிற என்னுடைய கனவு இந்த மைதானத்தில் தான் எனக்கு தொடங்கியது. நான் முதல் போட்டியில் இங்கு விளையாடிய நினைவுகள் இன்றளவும் என்னுள் அப்படியே இருக்கிறது.

இந்த மைதானத்தில் இன்று நான் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. கடந்த 2018ஆம் ஆண்டு இதே மைதானத்தில் தான் என்னுடைய டெஸ்ட் பயணத்தை துவங்கினேன். இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வரும் வேளையில் இந்த தொடரையும் சமன் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளர்கள் நிறையவே பங்களிக்கின்றனர்.

அதேபோன்று நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களாக வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். பவுலர்கள் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் எங்களது இலக்கு எல்லாம் அணியின் வெற்றி மட்டுமே. தென் ஆப்பிரிக்கா போன்ற கடினமான ஆடுகளங்களில் பொறுமையாக இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் பொறுமை காத்து மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். 

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்று விரைவாக முடிந்த ஒரு டெஸ்ட் போட்டியில் என் வாழ்க்கையில் நான் விளையாடியதே கிடையாது. முதல்நாள் மைதானத்தை பார்க்கும் போது எனக்கு இந்த போட்டி முடிந்திருக்கும் விதம் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. இந்த மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை