இந்த வெற்றியானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக வங்கதேச அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 6.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, “இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வெற்றியானது மிகப் பெரியது. ஏனெனில் நாங்கள் இங்கு ஒருபோதும் வெற்றி பெறவில்லை. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்று நம்பினோம். அதற்கேற்றவாரே நாங்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
குறிப்பாக கடந்த 10-15 நாட்களில், நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். இந்த வெற்றியானது எங்களின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் சாரும். நாஹித் ரானா, ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளிட்டோர் ரன்களை கட்டுப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடுவது ஒரு தொடக்க வீரருக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் ஷாத்மான் மற்றும் ஜாகீர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
உண்மையில் அவர்களின் பேட்டிங் எங்கள் அணிக்கு உதவியது. நம்பிக்கையுடன், அவர்கள் தங்கள் வடிவத்தைத் தொடருவார்கள். அதேபோல் கடந்த 15-17 ஆண்டுகளாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஒருபோது களத்தில் சோர்வடையவில்லை, அதே தீவிரத்துடன் விளையாடுகிறார். இந்த சூடான சூழ்நிலையில் அவர் நன்றாக விளையாடினார். நான் அவருக்கு மட்டுமல்ல, எங்கள் அணியில் உள்ள பதினைந்து வீரர்களுக்கும் பெருமை சேர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.