ஐபிஎல் 2024: ரன் அவுட்டால் மனமுடைந்த ராகுல் திரிபாதி - வைரலாகும் காணொளி!

Updated: Tue, May 21 2024 22:44 IST
Image Source: Google

ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இண்று முதல் தொடங்கியுள்ளன.  அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டின் செய்வதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 3 ரன்களிலும், நிதீஷ் குமார் ரெட்டி 9 ரன்களிலும், ஷபாஸ் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இணைந்த ராகுல் திரிபாதி - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி அரைசதம் கடந்தர். அதன்பின் 33 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசென் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த ராகுல் திரிபாதியும் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் அப்துல் சமாத், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீர்ர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் இறுதிவரை போராடிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், வருன் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து கேகேஆர் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகினார். அதன்படி ஆட்டத்தின் 14ஆவது ஓவரை சுனில் நரைன் வீச, அந்த ஓவரில் அப்துல் சமத் பந்தை அடித்துவிட்டு ஓட தொடங்கினார். இதனிடையே ரன் ஓடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் சமத் ஒருபுறமும், திரிபாதி ஒருபுறமும் நின்றனர். பிறகு ராகுலும் ஓட துவங்கியதாக நினைத்த சமத் மறுபுறம் கிரீசை கடந்துவிட்டார்.

 

ஆனால் ராகுல் திரிபாதி களத்தின் நடுவில் தடுமாறி நிற்க, ரஸல் சாதுரியமாக செயல்பட்டு பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ அடிக்க, ராகுல் திரிபாதி ரன் அவுட் ஆகி வெளியேறினார். எதிர்பாராத ரன் அவுட் காரணமாக மனமுடைந்த ராகுல் திரிபாதி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஓய்வறைக்கு செல்லும் வழியில், உணர்ச்சிகள் பொங்கிய நிலையில் ராகுல் திரிபாதி படிக்கட்டில் அமர்ந்து முகத்தை மறைத்தப்படி சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து இருந்தார். இதனை நேரலையிலும் காணமுடிந்தது. இந்நிலையில் ராகுல் திரிபாதி எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை