இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடர் தொடங்கியது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது.
முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதேபோல் 2ஆவது டி20 ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.
டம்புல்லாவில் இன்று நடைபெற்ற 3ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 39 ரன்களையும், ரோட்ரிக்ஸ் 33, மந்தனா 22 ரன்களும் எடுத்தார்கள்.
இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் விளையாடிய விஷ்மி, ஹர்ஷிதா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அத்தபத்து அரைசதம் கடந்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அத்தபத்து 80 ரன்களைச் சேர்த்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மக்ளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.