நாங்கள் சரியான திட்டத்தில் பந்துவீச தவறிவிட்டோம் - தசுன் ஷனகா!

Updated: Sun, Oct 08 2023 11:42 IST
நாங்கள் சரியான திட்டத்தில் பந்துவீச தவறிவிட்டோம் - தசுன் ஷனகா! (Image Source: Google)

நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 750 ரன்களையும், 100-க்கும் மேற்பட்ட பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். 

இருந்தாலும் இந்த போட்டியில் இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டி காக் மார்க்ரம், வாண்டர் டுசைன் ஆகிய மூவரும் சதம் அடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை மட்டுமே குவித்ததால் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவிடம் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்த இலங்கை தற்போது உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் இந்த தோல்வி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, “இந்த போட்டி ஆரம்பிக்கும் போதே இது ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் தென் ஆப்பிரிக்கா அணியில் இருக்கும் பேட்டிங் வரிசை அவ்வளவு பலமானது. அவர்களுக்கு எதிராக நாங்கள் சரியான திட்டத்தில் பந்துவீச தவறிவிட்டோம். எங்களது திட்டங்கள் சரியாக செயல்படவில்லை என்பதால் அவர்கள் நிறைய ரன்களை குவித்து விட்டனர். 

370 ரன்கள் வரை அவர்களுக்கு எதிராக வழங்கி இருந்தால் நிச்சயம் ஓரளவு எங்களுக்கு வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் ரன்களை அடித்து விட்டனர். அதேபோன்று எங்களது அணியிலும் அடித்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் இந்த இலக்கு சற்றே கூடுதலாக இருந்தது. அதேபோன்று எங்களது அணியில் சமீரா, ஹசரங்கா மற்றும் தீக்ஷனா ஆகியோர் இல்லாதது பெரிய பின்னடைவை தந்துள்ளது. இருந்தாலும் இது விளையாட்டில் ஒரு பகுதி தான். அவர்கள் இல்லை என்பதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை