இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) வரவிருக்கும் சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் தங்கள் பெயர்களை ஏலத்திற்காக பதிவுசெய்வார். இதில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரண்டு சீசன்களாக ஏலத்தில் பங்கேற்ற சமயத்திலும், அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவுசெய்வாரா இல்லையா என்பது கேள்வியாகவே இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடரில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், மெகா ஏலத்தில் தனது பெயரை நிச்சயம் பதிவுசெய்வேன் என்றும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'நான் மீண்டும் ஒருமுறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புகிறேன். என் பெயரை ஏலத்தில் பதிவுசெய்வேன்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் விளையாடுவதற்காக ஸ்மித் தொடர்ந்து ஏலத்தில் தனது பெயரை பதிவுசெய்துவரும் நிலையில், கடந்த இரண்டு சீசன்களில் எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. அடிப்படை விலையான ரூ.2 கோடியில் கூட அவரால் எந்த அணியிலும் இடம் பிடிக்க முடியாத சூழல் உருவானது. மேலும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே அவர், ஆஸ்திரேலியாவுக்காக டி20 கிரிக்கெட்டிலும் அதிகம் விளையாட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 67 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 24.86 என்ற சராசரியில் 1,094 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்சமயம் உலகெங்கிலும் நடைபெற்றுவரும் பிரான்சைஸ் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்காக விளையாடி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுத்துள்ளார். அதன்படி மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய அவர், 56 என்ற சராசரியில் 148.67 ஸ்ட்ரைக் ரேட்டில் 336 ரன்களை குவித்து அசத்தியதுடன், இத்தொடரில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
மேற்கொண்டு வஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அணியை திறம்பட வழிநடத்தியதுடன், அந்த அணி கோப்பையை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்துள்ளார். அதிரடியாக விளையாடுவதுடன், அணியின் கேப்டனாகவும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான செயல்பட்டுள்ளதால், அவரை தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் நிச்சயம் இம்முறை ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.