சாம்சனை விட பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் - சுனில் கவாஸ்கர்!

Updated: Sun, Jun 02 2024 19:53 IST
சாம்சனை விட பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் - சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ள காரணத்தனால் இத்தொடரின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியானது நடப்பு சீசனிலாவது கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இத்தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மஹ்முதுல்லா - ஷாகில் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷ்தீப் சிங், ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனும் ஏறத்தாழ உறுதிசெய்யபட்டு விட்டது. ஆனாலும் அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன. ஏனெனில் ரிஷப் பந்த் மிகப்பெரும் காயத்திற்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். அதேசமயம் சஞ்சு சாம்சனும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தனது திறனை நிரூபித்துள்ளார். இதனால் யார் விக்கெட் கீப்பர் தேர்வாக இருப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இநிந்லையில் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பந்த் மிகச்சிறந்த கீப்பர் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "விக்கெட் கீப்பிங் திறமையை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தால் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பந்த் சிறப்பானவராக இருக்கிறார். நான் இங்கு பேட்டிங் பற்றி கூறவில்லை. ஆனால் அதுவும் பார்க்க வேண்டிய ஒரு அம்சம்தான். ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் இருந்து சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடவில்லை.

ஆனால் ஐபிஎல் சீசனை அவர் தொடங்கிய விதத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் டி20 வடிவத்தில் கடந்த மூன்று நான்கு போட்டிகளாக நன்றாக விளையாடவில்லை. அவர் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கிடைத்த ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். அந்த போட்டியில் அவர் 50-60 ரன்கள் எடுத்திருந்தால் இங்கு கேள்வியே இந்திருக்காது. ஆனால் தற்போது இந்திய தேர்வுக் குழு ரிஷப் பந்தை கீப்பராக விளையாட வைக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை