ஐபிஎல் தொடங்கினால், இந்த மூன்று அணிகளுக்கு தான் சாம்பியன் பட்டம் - சுனில் கவாஸ்கர்

Updated: Sat, May 15 2021 11:57 IST
Image Source: Google

கரோனா வைரஸின் 2ஆவது அலை வேகமாக பரவியதை அடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தோடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சிகளை செய்து வருகிறது. 

ஒருவேளை ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு பெரும் ஏமாற்றமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு எழுச்சிப் பெற்று, இத்தனை ஆண்டுகளாக வலம் வந்த ஒரு சாம்பியன் அணியாகவே வந்துவிட்டது. அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல், இந்த முறை தனது ஆற்றலை புதுப்பித்து வந்திருக்கிறது. மொயீன் அலியை மூன்றாவது வீரராக களமிறக்கியது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

இடது கை பேட்ஸ்மேனான அலியை ஒன் டவுனில் இறக்கியதால், பல இன்னிங்ஸில் அவரது அதிரடியான ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமான முடிவுகளை வழங்கியுள்ளது. அனுபவமுள்ள ஃபாஃப் டு பிளசிஸ் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார், மேலும், ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு சிறந்த தொடக்கங்களை வழங்கினார். சாம் கரண் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து ஈர்க்கிறார், தன்னை மேம்படுத்துகிறார். 

இப்போது ஏலம் எடுக்க அவர் ஒரு சரியான ஆல் ரவுண்டராக உள்ளார். எனினும், மும்பைக்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் எடுத்த போதிலும், கடைசி பந்தில் ஆட்டத்தை இழந்ததை பார்க்கையில், ​​சென்னை அணி தனது பவுலிங்கை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது தெரிய வருகிறது.

ஒருவேளை நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டால் அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுள் ஏதேனும் ஒரு அணி தான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை