ரோஹித், வாட்சன் வரிசையில் இணைந்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதில் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கியகேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 56 பந்துகளை சந்தித்த நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தன் மூலம் ரோஹித் சர்மா, ஷேன் வாட்சன் ஆகியோரது சாதனைகளை சமன்செய்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் சதமும் அடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் சதமும் அடித்து அசத்தினர். தற்போது அந்த வரிசையில் சுனில் நரைனும் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன், ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 276 ரன்களைக் குவித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.