டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் துருப்புச்சீட்டாக இருப்பார் - சுரேஷ் ரெய்னா!

Updated: Thu, Jan 11 2024 19:02 IST
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் துருப்புச்சீட்டாக இருப்பார் - சுரேஷ் ரெய்னா! (Image Source: Google)

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 16 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியாவுக்கு ரோஹித் சர்மா தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்த தரமான அணி களமிறங்கும் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் தற்போது தொடங்கியுள்ள ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களும் தேர்வாகியுள்ளனர். பொதுவாக போட்டி நிறைந்த இந்திய அணியில் இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு 5 முனை போட்டு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

அதில் காயத்திலிருந்து குணமடைந்து வரப்போகும் ரிஷப் பந்த், 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் ஆகியோருக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிசான் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு போட்டியில் உள்ளனர். இந்நிலையில் கழற்றி விடப்பட்டாலும் சமீபத்திய தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் சதமடித்து தரத்தை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சஞ்சு சாம்சன் துருப்பச்சீட்டு வீரராக செயல்படக்கூடியவர் என்று தெரிவிக்கும் ரெய்னா என இதுகுறித்து பேசுகையில், “விக்கெட் கீப்பிங் இடத்திற்கு கடினமான போட்டி இருப்பதாக நான் கருதுகிறேன். ஏனெனில் ரிஷப் பந்த் ஃபிட்டாகும் நிலையில் கேஎல் ராகுல் வருவார். சஞ்சு சாம்சன், இஷான் கிசான் மற்றும் ஜித்தேஷ் ஆகியோரும் அங்கே இருக்கின்றனர். எனவே அந்த இடம் மிகவும் முக்கியமாக இருக்கிறது.

இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த ஒருநாள் சதத்துக்கு பின்பும் நீங்கள் சஞ்சு சாம்சனை முடிந்தவர் என்று எழுத முடியாது. பயமற்ற பேட்ஸ்மேனான அவர் நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்ஷிப் செய்யும் திறமை கொண்டவர். தமக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் எப்போதும் அசத்தியுள்ளார். அதே சமயம் கே.எல் ராகுல், ஜித்தேஷ், ரிஷப் பந்த், இஷான் கிசான் ஆகியோரும் இருக்கிறார்கள்.

எனவே இது பெரிய முடிவாகும். இருப்பினும் மிடில் ஆர்டர்களில் சிறப்பான ஷாட்டுகளை அடிக்கக்கூடிய சஞ்சு சாம்சனை நான் தேர்வு செய்வேன். ஐபிஎல் தொடரும் விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றும். எனவே ஆஃப்கானிஸ்தான் தொடர் சஞ்சு சாம்சனுக்கு நல்ல வாய்ப்பாகும். அவர் உலகக் கோப்பையில் இந்தியாவின் துருப்பு சீட்டு வீரராக இருப்பார்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை