SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!

Updated: Thu, Jul 18 2024 20:42 IST
Image Source: Google

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இதில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. 

அதேபோல் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவையும், துணைக்கேப்டனாக ஷுப்மன் கில்லை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்த அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்களான ரியான் பராக், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் இருந்து அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார்.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் மீண்டும் தேர்வு குழுவினர் பாரபட்சம் காட்டுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஏனெனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணியில் நட்சத்திர வீரரும், சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இடம்பிடித்திருந்து ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிலும் நடந்து முடிந்த ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு சூர்யகுமார் யாதவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர்த்து தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ஷுப்மன் கில் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களைக் காட்டிலும் ஷுப்மன் கில்லிற்கு சலுகைகளை பிசிசிஐ வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

இதுதவிர்த்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுபக்கபட்டு ரிஷப் பந்த், ரியான் பராக், ஷிவம் தூபே போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்தியதியதுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் 56 என்ற சராசரியைக் கொண்டுள்ள நிலையிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பெரிதளவில் சோபிக்க தவறிய ரிஷப் பந்த அனைத்து போட்டிகளிலும் விளையாடிய நிலையில், சஞ்சு சாம்சனிற்கு ஒரு வாய்ப்பினை கூட இந்திய அணி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது மீண்டும் அவரை வைத்து பிசிசிஐ விளையாடும் அரசியலை வெளிக்காட்டியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை