இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லரும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் நிதீஷ் குமார் 27 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களையும் சேர்த்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில், அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியிலும் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 

ஆனாலும் அடுத்து இணைந்த சூர்யகுமார் யாதர் 50 ரன்களையும், ஷிவம் தூபே 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “எங்களுக்கு இந்த இலக்கு கடினமாக இருக்கும் என்று தெரியும். நாங்கள் சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்ததற்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அதன்படி இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடும் வீரர்களின் பலர் எங்களுடன் சேர்ந்து விளையாடி உள்ளனர். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர்கள் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அதற்காக அவர்கள் கடினமாக உழைத்துள்ளனர். மேலும் இங்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் சமயத்தில் ரன்களைச் சேர்ப்பது மிகவும் கடினம் என்பது எங்களுக்கு தெரியும். 

Advertisement

எங்கள் அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்கள் தங்களது பணியைச் சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக அர்ஷ்தீப் சிங் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இன்று ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. எனவே ஷிவம் துபேவிற்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்தோம். ஏனெனில் இப்படியான சூழலில் உங்களிடம் உள்ள கூடுதல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால், அது எஞ்சியுள்ள போட்டிகளில் உங்களுக்கு தேர்வு செய்வதற்கு எளிதாக இருக்கும். 

அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது பெரிய நிம்மதி. ஏனெனில் இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானது கிடையாது. நாங்கள் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் அடிப்படை விஷயங்களை கடைசி வரை பின்பற்றினோம். இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தன்னிடம் வித்தியாசமான இந்த மாதிரி ஆட்டம் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் எதிர்பார்ப்பது இதைத்தான்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News