T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!

Updated: Tue, Jun 11 2024 23:19 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீதி தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தலிவால் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இப்போட்டியில் ஆரோன் ஜான்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவர, மறுபக்கம் களமிறங்கிய பிரகத் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும், ஸ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவிந்தர்பால் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதன் காரணமாக கனடா அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இருப்பினும் மறுபக்கம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் ஜான்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் ஜான்சன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் நசீம் ஷா பந்துவீவில் போல்டாகினார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் சாத் பின் ஸஃபர் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் இறுதியில் திலன் ஹெய்லிகர் 9 ரன்களையும், கலீம் சனா 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது அமீர் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் சைம் அயூப் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் திலன் ஹெய்லிகர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருவரும் இணைந்து ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 63 ரன்களைச் சேர்த்த நிலையில், கேப்டன் பாபர் ஆசாம் 33 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஃபகர் ஸமானும் 4 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை